சென்னையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரு.வி.க நகர் மக்களுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வியாசர்பாடி ஆடுதொட்டி பகுதியில் நிவாரண பொருட்களை வழங்கினார்.
திரு.வி.க நகர் பகுதியில் சுமார் 300 பேருக்கு பால், வாழைப்பழம், பிஸ்கட், உணவு மற்றும் சாப்பாடு போன்றவற்றை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
சென்னையில் கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் , ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களுக்காக செயல்படுவதாகவும், மத்திய குழு புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு சென்னைக்கு வருவது குறித்து பேசியவர், மிக்ஜாம் புயல் அல்லது எந்த இயற்கை இடர்ப்பாடாக இருந்தாலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வருவார்கள்.
அவர்களிடம், எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை சரியாக சொல்ல வேண்டும். போலியாக கணக்கு சொல்லாமல் முறையாக தெரியப்படுத்த வேண்டும் என்றும், புயலின் தாக்கத்தால் நடுத்தர வர்க்கம் ரொம்ப பாதிக்கப்பட்டதாகவும், சென்னை வெள்ளக்காடாக மாறி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திரு.வி.க நகர் பகுதியில் முழுமையாக பாதிப்பு இருக்கிறது. பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.
புயலுக்கு முன்பாகவே அறிவிப்பு கொடுங்கள். முன்னேற்பாட்டு நடவடிக்கைக்கு மக்களை தயார்படுத்த வேண்டும் என்று திமுக அரசை விமர்சித்த ஜெயக்குமார், பல மக்களின் வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள், உடைகள் எல்லாம் தண்ணீரில் போய் விட்டது என்றும் கூறினார்.
அரசின் 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்குவது பற்றி பேசியவர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல விஷயங்களை சுட்டி காட்டி, அதுக்கு 6000 ரூபாய் போதுமா? 12000 ரூபாயாக கொடுக்க வேண்டும் எனவும், எங்கள் ஆட்சியில் 5000 கொடுத்தோம்.
அன்றைக்கு விலைவாசி வேறு. இன்றைக்கு விலைவாசி வேறு. அதனால் 12000 கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்றும், எங்கள் ஆட்சியில் புயல் காலத்தில் தூய்மை பணியாளர்களை வெளியில் இருந்து கொண்டு வந்து ஊக்கத்தொகை கொடுத்தோம். அதையும் இந்த அரசு தரவில்லை. கேட்டால் நிதி நெருக்கடி என்பார்கள்.
எங்கள் ஆட்சியிலும் நிதி நெருக்கடி இருந்தது. அந்த சூழலிலும் எந்த புயலாக இருந்தாலும் மக்களுக்கு வேண்டியதை செய்தோம். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு எனவும்,
தலைமை செயலாளர் தான் தினமும் இதை பற்றி பேசுகிறார்.
பொம்மை முதலமைச்சர் எதுவும் பேசவில்லை. இன்றைக்கு தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது என்று விமர்சித்தார். சென்னை வரலாற்றில் இதுவரை அமைச்சர்கள், மேயரை விரட்டிய வரலாறு கிடையாது. பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மின்சாரமும் கொடுக்கவில்லை. பல இடங்களில் சேறு சகதியாகவும், குப்பைகளும் எடுக்கவில்லை.
சரியான திட்டமிடுதல் கிடையாது. பக்கிங்காம், கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆற்றை தூர்வாரினால் தண்ணீர் வெளியேறும். இந்த அரசு அதை பண்ணவில்லை.
வடிகாலே அமைக்காவிட்டால் தண்ணீர் எப்படி கடலில் கலக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை பெரு வெள்ள பாதிப்பு குறித்து திருப்புகழ் கமிட்டி கொடுத்த அறிக்கையினை வெளியிடாதது ஏன் எனவும் திமுக ஆட்சியில் தானே அந்த கமிட்டி அமைக்கப்பட்டது அந்த அறிக்கையின் படி செயல்பட்டு இருந்தால் இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்காது
தண்ணீர் தேங்கவில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அமைச்சர் மா.சு சொல்கிறார் என்பதை விமர்சித்த ஜெயக்குமார், மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த ஆட்சியிலும் இப்படி மோசமாக இருந்தது இல்லை என்றும்,
முறையான திட்டமிடல் இல்லாததால் மக்களை தவிக்க விட்டு விட்டதாகவும், வானிலை ஆய்வு மையம் கனமழை இருக்கிறது என்று சொல்லியும் இந்த அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை. இன்றைக்கு சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டத்தில் மக்கள் பரிதவிக்கிறார்கள்.
2015 ல் நாங்கள் எடுத்த நடவடிக்கையால் தான் மீண்டும் வர முடிந்தது என்றும், இதன் தாக்கம் 2024 ல் இருக்கும். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை அரசு இல்லை. செயற்கை அரசாங்கம். நவம்பர் 5 முதல் டிசம்பர் 5 வரை மழை 50 சதவீதம் தான். இதற்கே தாங்க முடியவில்லை. மக்கள் ரொம்ப கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் மத்திய அரசை வலியுறுத்தி நிதியை அதிகமாக வாங்கி கொடுக்க வேண்டும். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். ஆளுங்கட்சியாக இருந்து 35 எம்.பிக்களை வைத்து கொண்டு உதயநிதி இப்படி சொல்லலாமா? இது அரசின் கையாளாகாத தனம். எங்களை பொறுத்தவரை எதிர்கட்சியாக நிதி குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும், நீங்கள் மக்களுக்காக வாதாடி அதிகமாக நிதியை மத்திய அரசிடம் இருந்து வாங்கி தர வேண்டும்.
அதிமுகவை பொறுத்தவரை, எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட தொண்டர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார் என்றும், போதுமான அளவு அரசியல் கட்சிகள் களத்திற்கு வரவில்லை என்று கூறிய குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமார் பதில் அளித்தவர், ஆளுங்கட்சி ரோல் தான் முக்கியம். எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் கடமையில் இருந்து நாங்கள் தவறவில்லை.
அமைச்சர் மா.சு விடுத்த சவால் குறித்த கேள்விக்கு, சில விஷயங்களை பட்டியலிட்டு அரசு செய்யும் வேலையா இது? எங்களை பொறுத்தவரை நாங்கள் எப்போதும் விவாதிக்க தயார். வெள்ளை அறிக்கையை கொடுக்க சொல்லுங்கள்.
நாளை வெள்ளை அறிக்கையை கொடுத்து விட்டு விவாதத்திற்கு கூப்பிடுங்கள். நாளை மறுநாளே விவாதத்திற்கு வருகிறேன் எனவும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பண்ணியதை பற்றி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கேட்டதற்கு, சுப்ரீம் கோர்ட் ஆணையை படித்து விட்டு விரிவாக சொல்கிறேன் என்றும் கூறினார்.