தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா, குறிப்பிட்ட படங்களை மட்டும் உறுதி செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை தமன்னாவை தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்த நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் திடீரென நீக்கியுள்ளது.
இதனையடுத்து, தமன்னா தனது வழக்கறிஞர் மூலம் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க 2 கோடி ரூபாய் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமன்னாவுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறியுள்ள நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம், ஆனால் வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தமன்னா தங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார் என்றும், விடுபட்ட இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து தமன்னாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிகழ்ச்சியை முழுமையாக முடித்து கொடுக்க ஏற்கனவே முடிவான சில ஒப்பந்தங்களை தமன்னா ரத்து செய்தார் என்றும், ஆனால் திடீரென்று அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டனர் என்றும், சம்பள பாக்கி உள்ளதாலும், தயாரிப்பு தரப்பின் ஒழுக்கமற்ற செயலினாலும் தமன்னா அவர்கள் மீது வழக்கு தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்துவிட்டு திடீரென்று நீக்கியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.