சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை 12ம் வகுப்புத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் உள்ள கூலித் தொழிலாளி முனியாண்டி – அம்பிகாபதி தம்பதிக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும் 14 வயதில் சித்ரா செல்வி என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில்( சின்னதுரை 12 ஆம் வகுப்பு) படித்து வந்த நிலையில் ,
கடந்த ஆண்டு பள்ளியில் சக மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த மாணவர்கள் இரவு 10 மணியளவில் சின்னதுரை வீட்டிற்குள் நுழைந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சின்னதுரையை வெட்டினர்.
மேலும் அதனை தடுக்க முயன்ற தங்கை சந்திரா செல்வியையும் வெட்டினர். இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் மற்றும் இடை நின்ற மாணவர்கள் 2 பேர் உட்பட 6 பேரை நாங்குநேரி போலீசார் கைது செய்தது.இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை 12ம் வகுப்புத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.
இந்த சூழலில் நாங்குநேரியில் கடந்தாண்டு உடன்படித்த மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக தாக்குதலுக்கு ஆளான, மாணவர் சின்னதுரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.