கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் உருவாகியுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள “ஹோம் ரீப் எரிமலை”, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது.
இந்த எரிமலை வெடித்த பதினொரு மணி நேரத்திற்குப் பிறகு, பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் இருந்து உருவானது என்று நாசா புவி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.மேலும், செயற்கைக்கோள்கள் மூலம் இத்தீவின் படங்களை படம்பிடித்துள்ளது.
செப்டம்பர் 14 அன்று இத்தீவின் பரப்பளவு 4,000 சதுர மீட்டர் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 33 அடி உயரத்தில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், செப்டம்பர் 20க்குள், இந்த தீவு 24,000 சதுர மீட்டர் பரப்பளவாக பெருகிவிட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
நீருக்கடியில் அமைந்துள்ள நீர்மூழ்கி எரிமலைகள் வெடித்து சிதறும் போது உருவாக்கப்படும் தீவுகள் போன்ற அமைப்பு பெரும்பாலும் குறுகிய காலமே நீடித்திருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
1995 இல், கடலில் அமைந்துள்ள “லேடிகி” என்ற எரிமலை வெடிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு தீவு 25 ஆண்டுகளாக அழியாமல் இருந்தது. லேடிகி எரிமலை வெடிப்பால் 2020 இல் உருவாக்கப்பட்ட ஒரு தீவு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீரில் அழிந்துபோனது குறிப்பிடத்தக்கது.