அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான, எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம்.
அதிமுக தொடங்கிய பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல், திமுக அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதனால் கொங்கு பகுதியில் செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி, குடிநீர் விநியோகத்தை சீராக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக ஐடி குழுவினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர். அதனை ஊடகங்களும் செய்திகளாக பதிவிடுகின்றனர்.

அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல்கள் இருப்பதாக பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகள்ளை வெளியிடுகின்றன. ஆனால், கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.
கட்சிக்குள் எந்த பிரச்சனை வந்தாலும், அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின்னரே எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவையும் எடுப்பார்.
கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டிய எஸ் பி வேலுமணி, 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பொறுப்பு ஏற்ற, உடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.