கோவில்பட்டு அருகே மதுபோதைத் தகராறில் ஓட்டுநரை நண்பர்களே கொலை செய்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/kovilpatti-murder-04.jpg?resize=1024%2C576&ssl=1)
திருநெல்வேலி மாவட்டம் தாளையூத்து புலித்தேவர் நகரை சேர்ந்தவர் சந்தன மாரிமுத்து.
டிரைவரான இவர், சனிக்கிழமை இரவு நண்பரான சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த பிரேம்சங்கருடன், சூரியமினுக்கன் கிராமத்துக்கு வந்துள்ளார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான ஹரிபிரகாஷ் மற்றும் இசக்கிமுத்து ஆகியோருடன் சேர்ந்து அங்குள்ள பேருந்து நிலையம் பகுதியில் மது அருந்தி உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மதுபோதையில் இருந்தவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரேம்சங்கர், ஹரிபிரகாஷ், இசக்கிமுத்து ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து டிரைவர் சந்தனமாரிமுத்துவை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/kovilpatti-murder-02.jpg?resize=1024%2C576&ssl=1)
பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தனமாரிமுத்து குறித்த தகவலில் அங்கு வந்த கயத்தாறு காவல் நிலைய போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு டிரைவர் சந்தன மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/kovilpatti-murder-01.jpg?resize=1024%2C576&ssl=1)
இதையடுத்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த கயத்தாறு போலீசார், கொலை செய்துவிட்டு தலைமறைவானவர்களை தேடி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரேம்சங்கர் மற்றும் ஹரி பிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்த போலிசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/kovilpatti-murder-03.jpg?resize=1024%2C576&ssl=1)
மேலும் தலைமறைவாக உள்ள இசக்கிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆண் என நினைத்து பெண் நீர்யானையை வளர்த்த பூங்கா!