புதுவை மாநிலத்தில் வீடு இல்லாத 10க்கும் மேற்பட்ட நாய்களை மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாய்க்கடி சம்பவம் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றன.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/dog-dead-8.jpg?resize=1024%2C576&ssl=1)
புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன், திருக்கனூர் லட்சுமி நகரில்தான் வாயில்லா ஜீவன்களைக் கொலை செய்த படுபாதகம் அரங்கேறி உள்ளது.
இங்கு ஊருக்கு வெளியே உள்ள திறந்த வெளியில்தான் இந்த நாய்க்கொலை நடந்தேறி இருக்கிறது.
மர்மநபர்கள் யாரோ, கழிவாக வீசப்பட்ட கோழியின் குடலில் விஷத்தை தடவி நாய்களுக்கு உணவாக்கி இருக்கிறார்.
இதனை தின்ற 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷத்தின் காரணமாக சுருண்டு விழுந்து இறந்துள்ளன. சில இடங்களில் கீரிகளும் உயிரிழந்துள்ளன.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/dog-dead-10.jpg?resize=1024%2C576&ssl=1)
ஊருக்கு வெளியில் உள்ள அந்த பகுதியில் சமூக விரோதிகள், கஞ்சா போன்ற சமூக விரோத செயல்களை செய்ய அங்கு வருவதும், அதற்கு நாய்கள் தொல்லையாக இருப்பதாகவும் கருதி இந்த படு பாதக செயலை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து திருக்கனூர் காவல்நிலையத்தில் லட்சுமிநகரை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது;
நாங்கள் குடியிருக்கும் பகுதி ஊருக்கு வெளியே உள்ளதால் எங்கள் பாதுகாப்புக்காக் நாய்களை வளர்க்கிறோம்.
அதே போல தெருநாய்களும் வளர்கின்றன. அதற்கு அனைத்து வீடுகளிலும் சாப்பாடு வைத்து வருகிறோம். நாய்கள் இரவு நேரங்களில் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தது.
மே 8ஆம் தேதி இரவு சில சமூக விரோதிகள் அந்த நாய்களுக்கு கோழி குடலில் விஷம் வைத்து 10நாய்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளன.
இன்று (மே9) இரண்டு நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. இதற்கு காரணமான அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, புகார்மனுவில் கூறியுள்ளார்.’
புகாரின் பேரில், விஷம் வைத்து 10க்கும் மேற்பட்ட நாய்களைக் கொன்றவர்களை தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.