இன்று வரலாற்று நாள், வரும் நாட்களில் எடப்பாடியார் தலைமையில் கட்சியும் ஆட்சியையும் கொண்டு வரபடும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன.
ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பிலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு அளித்தார்.
அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து கடலூரில் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எம்சி.சம்பத் தலைமையில் பாதிரிகுப்பம் பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எம்சி.சம்பத்,
அதிமுகவிற்கு இன்று மிகப்பெறும் வெற்றி.வரலாற்று நாள்.தலைச்சிறந்த நாள்.வரும் நாட்களில் எடப்பாடியார் தலைமையில் கட்சியும் ஆட்சியையும் கொண்டு வர நாங்கள் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார்.