விரைவில் தமிழகத்தை சேர்ந்த மூன்று நான்கு பெண்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் வளாகத்தில் கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் துவங்கியுள்ளது.
சுமார் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர் அடுத்த 30 நாட்கள் நடைபெற உள்ளது .
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டி தொடரின் இறுதி போட்டிகள் ஜூன் 5ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு கிரிக்கெட் போட்டியின் தொடக்கவிழா நடைபெற்றது.
தொடரின் ஒருங்கிணைப்பாளர்களான லீமா ரோஸ் மார்ட்டின், வின்னர்ஸ் இந்தியா கண்ணன், லிஜோ சுங்கத் உள்ளிட்ட பலர் பங்கேற்று வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்.
முன்னதாக, விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், சிபிஎல் கோவை போட்டி தொடர் சிறப்பாக துவங்கி உள்ளதாதாகவும், எந்த அளவுக்கு இந்த போட்டிகள் சிறப்பாக நடைபெறுகிறதோ இந்திய கிரிக்கெட்டிற்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை ஆண்களுக்கு நிகரான முக்கியத்துவம் பெண்களுக்கும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இப்போது மகளிர் கிரிக்கெட் புதிய புரட்சியை ஏற்படுத்தி, நல்ல ஒரு முன்னேற்றத்தை கண்டுவருகிறது. தமிழக பெண் வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஊக்கமளித்து வருகிறது.
விரைவில் தமிழகத்தை சேர்ந்த மூன்று நான்கு பெண்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்றும் நிரஞ்சனா நாகராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான். கண்டிப்பாக நடராஜன் இருந்திருக்க வேண்டும் .
அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பெறா விட்டாலும் விரைவில் பெரிய அளவில் எழுச்சி பெறுவார். அவரது யாக்கரை அடித்து கொள்ள ஆள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருஞ்சீரகம் : அத்தனை நோய்களுக்கும் ஒரே மருந்து – அதிசய மருத்துவ குணங்கள்!