“திமுக ஆட்சி என்றாலே அது இருட்டாட்சி தான்” தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பிரச்சனை குறித்து ஓ.பி.எஸ் காட்டம்…

திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலும் இருள் சூழ்ந்திருப்பதாக தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

2006-2011 தி.மு.க. ஆட்சியில், 2008 ஆம் ஆண்டு முதலே குறைந்த மின் அழுத்தம், மின் வெட்டு, மின் பற்றாக்குறை என ஆரம்பித்து மின்சார விடுமுறை என்ற அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டதையும், தமிழ்நாட்டில் தற்போது நிலவும் மின்வெட்டினையும் பார்க்கும்போது “ஞாபகம் வருதே ஞாபகம் வருதே” என்ற பாடல் வரிகள்தான் மக்களின் நினைவிற்கு வருகிறது.

தி.மு.க. ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் துன்புறுத்தல், கள்ளச்சாராய கலாச்சாரம், போதைப் பொருட்கள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பல பிரச்சனைகளால் மக்கள்அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.

ஒரிரு வாரங்களுக்கு முன்பு, வட சென்னைக்குட்பட்ட புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், மணலி, எம்.கே.பி. நகர், கொடுங்கையூர், சிட்கோ நகர், கொரட்டூர், ஒரகடம் பகுதிகளிலும், தென் சென்னைக்குட்பட்ட பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, திருநீர்மலை, லட்சுமிபுரம், சரஸ்வதிபுரம், ரங்கா நகர், அஸ்தினாபுரம், வேளச்சேரி, கிண்டி, தரமணி, சைதாப்பேட்டை, தி.நகர், அடையாறு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை, பெரும்பாக்கம், வளசரவாக்கம் என சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதன் காரணமாக மக்கள் தவித்தனர்.

இந்த மின்வெட்டு தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். அனகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளிலும் இரவு நேரங்களில் ‘மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த இரு நாட்களாக மின்வெட்டு இருப்பதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் பிரச்சனை நான்கு மாதங்களாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலையில் அலுவலகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவிட்டு திரும்பி வந்து வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால், இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு தூக்கமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் இரவு மற்றும் பகலில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.
தவிக்கின்றனர். தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர் .

தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலை நீடித்தால், அஇஅதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .

Total
0
Shares
Related Posts