தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகளில் பணி செய்து வரும் அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் நடத்தப்படும் ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகளில் பண்டக சாலை செயலர், கணக்கர், எழுத்தர், காசாளர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு நடைமுறை ஊதிய நிர்ணயம் 2016 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. ஊதிய நிர்ணயம் வகுக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், ஊதிய உயர்வு வழங்கக்கோரி பணியாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பில் தனிக்குழு அமைத்து பரிசீலிக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரையின் படி, புதிய ஊதிய நிர்ணயம் செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டது. அதன்படி, தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 7 சதவீதமும், தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5 சதவீதமும், தொடர்ந்து நஷ்டத்தில் செயல்படும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 3 சதவீதமும் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
![pay-hike-for-government-employees](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/12/vikatan_2020-04_a299b657-9f72-4164-b437-e57fcc31ebed_127134_thumb.jpg?resize=600%2C338&ssl=1)
இந்த புதிய ஊதிய நிர்ணயம் நடப்பாண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஆண்டு ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, பயணப்படி, மருத்துவப்படி, மாற்று திறனாளிகள் போக்குவரத்துப்படி, மருத்துவக் காப்பீட்டு திட்டம் போன்றவற்றையும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.