மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து வருமானவரி புதிய நடைமுறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா அல்லது பழைய நடைமுறைப்படி பிடித்தம் செய்யப்பட வேண்டுமா விவரத்தினை தெரிவிக்கப்பட்ட வேண்டும் என கருவூலக் கணக்குத் துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கருவூலக் கணக்கு ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தமிழ்நாடு முழுவதும் சுமார் 7 இலட்சம் ஓய்வூதியர்கள் சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் 37 மாவட்ட கருவூலங்கள் மூலமாக தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து வருமானவரி புதிய நடைமுறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா அல்லது பழைய நடைமுறைப்படிபிடித்தம் செய்யப்பட வேண்டுமா என்ற விவரத்தினையும் ஓய்வூதியர்கள் தங்களது பான்கார்டு எண்ணையும் சம்மந்தப்பட்ட கருவூலத்திற்கு 15.05.2024-குள் தெரிவிக்கவேண்டுமென கருவூலக் கணக்குத் துறை ஆணையர் அறிவுறுத்தியதாக 14.05.2024 நாளிட்ட பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டவாறு கருவூலக் கணக்குத் துறை ஆணையரகத்திலிருந்து எந்தவிதமான சுற்றறிக்கையோ அல்லது அறிவுறுத்தலோ கருவூலங்களுக்கோ மற்றும் ஓய்வூதிய சங்கங்களுக்கோ வழங்கப்படவில்லை. மேலும் பான்கார்டு எண்ணை சமர்பித்தல் மற்றும் வருமானவரி பிடித்தம் செய்யும் முறையினை (புதிய/பழைய) தேர்ந்தெடுத்தல் போன்றவற்றிக்கு எந்தவிதமான காலஅவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை.
எனவே, 14.05.2024 அன்று பத்திரிக்கைகளில், ஓய்வூதியர்கள் வருமானவரி பிடித்தம் தொடர்பான விவரங்களை 15.05.2024-க்குள் சமர்பிக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்து வெளிவந்த செய்திகள் கருவூலக் கணக்குத் துறை ஆணையரகத்தினால் வெளியிடப்படவில்லை எனவும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.