மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த போராட்டத்திலிருந்து சாக்ஷி மாலிக் (sakshee malikkh) விலகினார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து அவரை கைது செய்ய கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
மேலும், இந்த போராட்டத்தின் போது ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாகவும் மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் அறிவித்ததை அடுத்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் அவர்களை சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள் 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்தனர். அதையடுத்து, நேற்றுடன் 5 நாள் காலக்கெடு முடிவடைந்தது.
நேற்று, நள்ளிரவு மல்யுத்த வீரர்- வீராங்கனைகளுக்கு அமித் ஷாவை சந்திக்க நேரம் கிடைத்த நிலையில், பஜ்ரங் புனியா சாக்சி மாலிக், சங்கிதா போகத், சத்யவார்ட் கடியன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து பிரிஜ்பூஷன் சிங் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தினர்.
அவர்கள் கேட்டுக்கொண்டபடி அமித் ஷா, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இன்று டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து வீராங்கனை சாக்ஷி மாலிக் வெளியேறியுள்ளார்.
போராட்டத்தை கைவிட்ட வீராங்கனை சாக்ஷி மாலிக் (sakshee malikkh) மீண்டும் தனது ரெயில்வே பணியில் இணைந்துள்ளார்.