பாஜக இனி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
சென்னை அமைந்தகரையில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், தமிழநாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ,வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.
அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று பேசியதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தரப்பில், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வரும் செய்தி தவறானது” என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், திராவிடக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தனித்து பாஜக போட்டியிட வேண்டும் என்றும்,
அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக கூறப்படுவது அண்ணாமலையின் சொந்த கருத்து”என்றும் மேலும் அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதைதான் நாங்கள் பின்பற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.