டைட்டன் மினி நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் (james cameron) கருத்து தெரிவித்து உள்ளார்.
கடலில் மூழ்கிய டைட்டானிக் (titanic) கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட கடந்த 16ம் தேதி கனடா நாட்டின் நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்து சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமானது.
மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் (58), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), அவரது மகன் சுலைமான் தாவூத் (19), பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிகாரி பால் ஹெண்ட்ரி(77), ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகிய 5 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதையடுத்து தற்போது இந்த விபத்து குறித்து, டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் (james cameron) அளித்துள்ள பேட்டியில்…
“டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே இடத்திலேயே இந்த விபத்து நடந்து இருப்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக நான் அந்த பகுதியில் 33 முறை பயணம் சென்று வந்து இருக்கிறேன். அப்போது எனக்கு கூட சில மோசமான அனுபவங்கள் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் இருக்கும் அந்த பகுதியில் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும். எனவே, அங்கு ஒவ்வொரு கணமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் பெரிய அசம்பாவிதம் ஆகி அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவோம்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய அந்த பகுதியில் இனம்புரியாத ஏதோ அதீதமான ஒரு சக்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் உள்ள புதிய தொழில்நுட்ப சென்சார் கருவி மூலம் அதற்குள் பயணம் செய்தவர்கள் விபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து இருப்பார்கள்.
மேலும், இவ்வாறான சூழலில் அதில் இருந்து ஜாக்கிரதையாக வெளியேறும் வழிகளும் உள்ளன. ஆனாலும், எதிர்பாராமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்துவிட்டதால் அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.