2026 சட்டமன்றத் தேர்தலில் (2026 Assembly elections) போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என -தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்றவரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருகிறது.
இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழல் பற்றி அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள், “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால்,
நம் மக்களை சாதிமத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச, ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து,
இம்மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும்.
அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
என்னுடைய தாய்தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில்,
இன்னும் முழுமையாக உதவவேண்டும் என்பதே எனது நீண்டகால விருப்பமாகும்.
“தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் (2026 Assembly elections) போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும்,
தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது
எனக்கு அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள்பணி. அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.
நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடவுள்ளேன்.
அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடனாக கருதுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.