செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பதுங்கி இருந்த இருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
செங்கல்பட்டு கே.தேரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். பல வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் இவர் வழக்கு ஒன்றின் காரணமாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்திற்கு சென்று திரும்பி உள்ளார்.
அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை பின் தொடர்ந்து வந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள செங்கல்பட்டு நகர காவல்நிலையம் அருகே கார்த்திக் வந்த போது அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் நிலை தடுமாறிய கார்த்திக்கை சரமாரியாக வெட்டி உரு தெரியாமல் சிதைத்துவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்திலேயே கார்த்திக் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தப்பியோடிய மர்ம கும்பல் காய்கறி வியாபாரம் செய்து வரும் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியைச் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் என்பவரையும் வெட்டி உள்ளனர். மகேஷ் என்பவர் அவரது டிவி பார்த்து கொண்டிருந்த போது அந்த கும்பல் மகேஸின் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் வெட்டிக்கொள்ளபட்ட இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கும்பல் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தினேஷ், மாதவன், மைதீன் ஆகியோர் இந்த இரட்டைக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மறைமலை நகரில் பதுங்கியிருந்த அஜய் என்பவரை 2 கைகள் சிதைந்த நிலையில் தனிப்படை போலீஸ் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மாமண்டூர் அருகே தினேஷ், மொய்தீன் ஆகிய இரண்டு ரவுடிகளையும் காவல்துறையினர் பிடிக்க முயன்றனர்.
அப்போது, காவல்துறையினர் மீது ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றனர். இதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ரவுடிகளை நோக்கி சுட்டதில் தினேஷ், மொய்தீன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து உயிரிழந்த ரவுடிகளின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது