தமிழ்நாடு காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் ரூ.3 கோடி வரை பெற்று ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
இதையடுத்து இவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் இருப்பதாகவும், டெல்லியில் இருப்பதாகவும் தகவல் வெளியானதால், தனிப்படை போலீசார் அந்த மாநிலங்களுக்கு சென்று அவரை தேடி வந்தனர். ஆனாலும், அவரை பிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.