543நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், தற்போது முதற்கட்டமாக தமிழகம் , புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு ஏப். 19-ல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இத்தேர்தலில் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் எனப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி நாம் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை ஒப்புகை சீட்டுடன் உறுதி செய்யும் கருவியாகும்.
இந்நிலையில் ஓட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் விவிபேட்டில் பதிவாகும் ஓட்டுகளுடன் ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது . அப்போது விசாரித்த நீதிபதி சிறிய கட்டுப்பாட்டு கருவி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா அல்லது விவிபேட் இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா ? வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கட்டுப்பாட்டு கருவியை ஒரே ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? என பல்வேறு கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சிப்களை உற்பத்தி செய்த நிறுவனம், அதை மீண்டும் பயன்படுத்த முடியும் என ஆர்டிஐ-க்கு தகவலளித்துள்ளது முரணாக உள்ளது என வாதிட்டார்.
அப்போது ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருக்க முடியாது என்றும், அறிவியல் பூர்வமான விமர்சனமே தேவை என்றும் அறிவிறுத்தியுள்ளது. மெழுகி தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றது. தங்களால் தேர்தலை கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியது. அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் கிடைத்துள்ளதாக கூறிய வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
- ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 5% ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் முறையை தொடர வேண்டும்
- முடிவுகளை அறிவித்து 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும்
- ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன் பார் கோடு வைக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்
- இயந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடித்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும்
- வாக்கு இயந்திரங்களை வைக்கும் ஸ்ட்ராங் ரூமிலேயே சின்னங்களை பொருத்தும் இயந்திரங்களை வைக்க வேண்டும்
- மைக்ரோ கண்ட்ரோலர் யூனிட்டில் பயன்படுத்தும் ‘சிப்’ பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும்
- தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை வேட்பாளர்கள் வைக்கலாம்
- கோரிக்கைக்கு பின் மின்னணு இயந்திர தயாரிப்புக் குழுவின் பொறியாளர்கள் இயந்திரங்களை பரிசோதிப்பார்கள்.
- சரிபார்க்க வேண்டிய இயந்திரங்களை வாக்குச்சாவடி வரிசை எண் மூலம் வேட்பாளர்கள் அடையாளம் காண வேண்டும்.
- பொறியாளர்களின் பரிசோதனையின்போது வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் உடனிருக்கலாம்.
- கோரிக்கை வைக்கும் வேட்பாளரிடம் இருந்து சரிபார்ப்பு செயல்முறைக்கான செலவுத் தொகையை வசூலிக்க வேண்டும்.
- இயந்திரங்களில் முறைகேடு கண்டறியப்பட்டால் வேட்பாளர் கட்டிய செலவுத்தொகை திருப்பித் தரப்படும்.