ராமநாதபுரத்தில், வாக்கு சேகரிப்பின் போது, தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க ஓ.பன்னீர் செல்வம் (OPS) கேட்டுக் கொண்டது ஜெர்க்கை கிளப்பியது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திறந்த வாகனங்களில் கடைவீதிகளிலும் தெருக்களிலும் உலா வந்தும், வீடு வீடாக நடந்து சென்றும் தங்கள் சின்னங்களைக் காட்டி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
டீ க்கடையில் சென்று டீ ஆத்துவது, ஜூஸ் கடையில் விற்பனையில் ஈடுபடுவது, இளைஞர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்று ஒருபுறம் நூதன பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி வாக்கு சேகரிப்பின் போது சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
சமீபத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தனது கட்சிசின்னமான சைக்கிளுக்கு வாக்கு சேகரித்தபடி வந்தவர் , திடீரென்று கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிட்டார். ஆனாலும் உடனடியாக சுதாரித்துக் கொண்டவர், வேட்பாளரிடம் சைக்கிள் சின்னத்தை கொடுத்து கையை தள்ளிவைத்து காட்டு என்று சமாளிப்பிலும் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சின்னத்தை மாற்றிக் கூறியது திகைப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் மக்களை நோக்கி வாக்கு கேட்கும்போது, திடீரென்று தனது பலாப்பழம் சின்னத்தை மறந்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.
இதனால் அவரைச் சுற்றி நின்ற ஆதரவாளர்களும், பொதுமக்களும் திகைப்படைய, உடனடியாக பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றபடி சிரித்துக் கொண்டே கூறினார். தொடர்ந்து பழக்கதோஷத்தால் இரட்டை இலை என்று கூறியதாகவும் தெரிவித்த அவர் தனது பிரசாரத்தை தொடர்ந்தார்.
Also Read : https://itamiltv.com/shiny-wilson-appointed-as-member-of-asian-games-commission/
அதிமுகவில் இருந்து வந்த ஓ.பன்னீர்ல்செல்வம் கடந்த ஆண்டு எடப்பாடி தரப்பால் வெளியே அனுப்பப்பட்ட நிலையில் நான் தான் அதிமுக என்று அலைந்து திரிந்தவர் கட்சியின் சின்னம் மற்றும் கொடியினை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் கானல் நீராகி விட்டது.
இதனால் இந்த முறை பா.ஜ.கவுடன் கூட்டணி போட்டவர் சுயேட்சையாக களமிறங்கு பம்பரம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். ஆனாலும் பல ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த பாசம் அவரது ஆழ்மனதை விட்டு நீங்காததால், பழக்க தோஷத்தில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதாக அவருடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஓ.பி.எஸ்சை கைகழுவினாலும், அவர் இன்னும் (OPS) அதிமுகவை கைவிடவில்லை போலும்…