இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி போலி முகவர்களிடம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் பயின்று வரும் 19 வயது மாணவி மகாலட்சுமி. இவரது தந்தை இவர்களை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தனது தாயுடன் வசித்து வருகிறார். மாணவியின் தாயார் வீட்டிலிருந்தபடியே சில பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் 75பங்கு வாங்கினால் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்களில் இருமடங்காக லாபம் கிடைக்கும் என்ற வியாபார விளம்பத்தைப் பார்த்து அதில் முதலீடு செய்து பங்குகளை வாங்கியுள்ளார்.
இவ்வாறாக இரவு 11மணி அளவில் ஆரம்பித்த அவர் அதிகாலை வரை தாயின் வங்கிக் கணக்கிலிருந்த 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பங்குகளை வாங்கி 60ஆயிரம் வரை வென்றுள்ளார்.
பின்னர் தாம் வாங்கிய பங்குளை விற்க முயன்ற போது தான், இவ்வளவு நேரம் தாம் வாங்கியது அனைத்தும் போலியான பங்குகள் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தாயிடம் கூறினால் என்னாகுமோ என்ற அச்சத்தில் தனது அறையில் தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காலை மகளை எழுப்ப சென்ற தாய், மகள் தூக்கில் தொங்கிய காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல்அளித்துள்ளார்.
விரைந்து வந்த முத்தியால் பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் போலி பக்கத்தினை கண்காணித்து வருகின்றனர்.
மோசடிக் கும்பல் குறித்தும் போலியான லிங்குகள் மூலம் பணத்தை பறிக்க பல மோசடிக்கும்பல் செயல்படுவது குறித்தும் தமிழ்நாடு காவல்துறை வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் வறுமையின் காரணமாகவும்,
அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவும் இது போன்ற மோசடிக் கும்பலிடம் சிக்கி பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.