Site icon ITamilTv

திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. – டிபனை சாப்பிட்டுவிட்டு இடத்தை காலிசெய்த உறவினர்கள்..!

Spread the love

வேலூரில் திருமண வரவேற்பு முடிந்ததும் மணப்பெண் திடீரென திருமணத்தை நிறுத்திய சம்பவம் இரு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேலுார் மாவட்டம், பாக்கத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (25). இவருக்கும் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பாலமுருகன் (31) என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், நேற்று பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரி, விருந்துடன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை 9:00 மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது, திடீரென்று மணப்பெண் காலை, 6:00 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோரை அழைத்து எனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறினார். திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று மணப்பெண் தெரிவித்தார்.

இத்தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த இரு தரப்பினரும், மணப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால், அப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் கிடையாது. மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கவில்லை, என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்து, தாலியை துாக்கி வீசி விட்டார்.

இதனையடுத்து, இரு வீட்டாரும் தனது சொந்தக்காரர்களிடம் மன்னிப்பு தெரிவித்தனர். திருமணம் நின்றுவிட்டதாக தகவல் அளித்தனர். மேலும், காலை டிபன் வீணாகி விடும் என்ற காரணத்திற்காக இரு தரப்பினரும் கேட்டு கொண்டதன்படி உறவினர்கள் சாப்பிட்டு காலி செய்துவிட்டு, சோகத்துடன் மண்டபத்தை விட்டு சென்றனர்.


Spread the love
Exit mobile version