திருச்சி ஸ்ரீரங்கத்தின் அரங்கநாதர் சுவாமி கோயிலில் உள்ள கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல்நிலை சுவர் இடிந்து விழுந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி திருக்கோயில், 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். இந்த கோயிலில் 21 கோபுரங்கள் உள்ளது.

கடந்த சில மாதங்களாகக் கோவில் கிழக்கு வாசலில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 1.50 மணியளவில் கிழக்கு வாசல் நுழைவு வாயிலில் கோபுரத்தின் முதல் சுவர் இடிந்து விழுந்தது.

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்ததால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.