சென்னை உயர்நீதிமன்றம் (chennai high court) வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல எனத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை, காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). இவர் கடந்த 11-ம் தேதி பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவுவாயில் அருகே வந்தார்.
பின்னர், திடீரென்று அவர் தன் தலையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் தீப்பிடித்து எரிந்தது.
தொடர்ந்து உடலில் பெட்ரோல் ஊற்றியபடியே உடல் எரிந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உள்ளே நடந்து சென்றார். இதனால் தீ வேகமாகப் பரவியதால் அங்கிருந்த போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை.
எனவே, தீயணைக்கும் எந்திரம் மூலம், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், போர்வையை அவர் மீது போர்த்தினார்கள்.
இந்த தகவல் அறிந்ததும் வழக்குரைஞர்களும், வழக்கு விசாரணைக்கு வந்த பொதுமக்களும் அங்குக் கூட்டமாகத் திரண்டு விட்டனர். தனது உடல் தீப்பற்றி எறிந்த சூழ்நிலையிலும், தீக்குளித்த வேல்முருகன், அங்குக் கூடிநின்றவர்கள் மத்தியில் சத்தமாக,
‘நான் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவன். எனது மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து பார்த்தேன். ஆனால் சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை.
அந்த வருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது இந்த முடிவின் மூலம், இனிமேல் பொதுமக்களுக்கு உடனுக்குடன் சாதிச்சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.
பின்னர், அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் (chennai high court) தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற வளாகத்தல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியினத்தை சேர்ந்தவர் அல்ல என்றும்,
அவர் பட்டியல் இனத்தவர் என்பதால் பழங்குடியினர் சான்று கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சாதிச் சான்று வழங்கவில்லை எனத் தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.