சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயிலில் (train) தள்ளிக் கொல்லப்பட்ட மாணவியின், தந்தை மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விஷம் கலந்த மதுவைக் குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்துள்ளார் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 47).
இவரது மனைவி ராமலட்சுமி (43). மாணிக்கம் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகள் சத்தியப்பிரியா (20). இவர் தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில், பி.சி.ஏ.(BCA) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம்.
இந்நிலையில், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்குத் தாம்பரத்திலிருந்து மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது நடைமேடையில் நின்று இளம் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர், திடீரென்று அப்பெண்ணைப் பிடித்து ரயில் முன்பு தள்ளினார்.
தண்டவாளத்தில் விழுந்த அடுத்த நொடியே அப்பெண்ணின் தலை துண்டானது. இதனையடுத்து, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக ரயில்வே போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த இளம் பெண்ணின் துண்டான உடல் பாகங்களைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் காவலர் குடும்பத்திற்குள் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
மேலும், ஓய்வுபெற்ற சப-ஆய்வாளர் தயாளன் என்பவரின் மகன் சதீஷ் என்பதும், சத்தியப்ரியா, சதீஷ் ஆகியோரின் வீடு எதிரெதிரே என்பதாலும்,
இருவரும் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இவர்களின் காதல் விவகாரம், சத்யாவின் பெற்றோருக்குத் தெரிய வந்ததால் மகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வருடமாக சதீஷிடம் சத்யா சரியாகப் பேசாமல் இருந்ததால் சத்யா மீது கோபத்திலிருந்த சதீஷ் மூன்று மாதங்களுக்கு முன் அவரது கல்லூரிக்குச் சென்று நுழைவாயிலில் வைத்து சத்யாவைத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சதீஷை விசாரித்த போலீசார்,
இருவரது பெற்றோரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னரும், சதீஷ் தொடர்ந்து சத்யாவிடம் பேச முயன்றும் அவர் சமாதானம் அடையாததால், வியாழக்கிழமை பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயிலுக்காகத் தோழிகளுடன் காத்திருந்த மாணவி,
சத்யாவிடம் வலியச்சென்று வம்பிழுத்து சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் சத்யா இனி தனக்குக் கிடைக்க மாட்டார் என்ற நிலைக்கு வந்த சதீஷ், செத்து ஒழி என்று ஆவேசமாகக் கத்தியபடி,
தாம்பரத்திலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த மின்சார ரயில் (train) முன்பு சத்யாவைப் பிடித்துத் தள்ளி கொலை செய்ததாக உடன் இருந்த தோழிகள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த சதீஷ் நள்ளிரவு 2 மணி அளவில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஏற்கனவே தியாகராயநகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.