ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் தொடர்பான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக தொடங்கியுள்ளனர்.
குழப்பத்தில் மக்கள்
இப்படியான சூழலில் பிரதான கட்சிகளின் செயல்பாடுகளில் அதிமுகவின் செயல்பாடும் அதன் பின்னணியில் பாஜகவின் செயல்பாடும் உற்று கவனிக்கப்படுகிறது. அதற்கான காரணம் அதிமுகவில் இருக்கும் மோதல் போக்கு என்பது அனைவரும் அறிந்ததே. இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி என இரு தரப்புமே வேட்பாளரை நிறுத்தப்போவதாக சொல்வது; இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு என்ற பேச்சுகள்; ஸ்திரமான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது; ஓ.பி.எஸ்-ன் கருத்துகள் போன்ற விஷயங்கள் அதிமுகவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்ணாமலையின் சூசக தகவல்
அதிமுக – பாஜக கூட்டணியில் யார் போட்டியிட உன்னனர்? அல்லது இரு கட்சிகளுமே போட்டியிட உள்ளனரா என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் கருத்தில் சூசகமான பதில் இருந்தது. அதாவது, “கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான். ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளனர். அதிமுகவினர் பலர் அங்கு வெற்றி பெற்றுள்ளனர்” போன்ற கருத்துகளை அவர் சொன்னதன் மூலமாக பாஜக போட்டியிடாது, அதிமுக தான் போட்டியிடும் என அவர் சூசகமாக சொன்னதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரம், அதிமுகவின் வேட்பாளர் நியமனத்தில் பாஜகவின் தலையீடு இருக்கும் என்றே எதிர்பார்க்கவும் வைக்கிறது அண்ணாமலை அவர்களின் கருத்து.
இரு அணிகளின் நிலைப்பாடு
அதிமுக தரப்பில் இருந்து வந்துள்ள சமீபத்திய தகவல், ‘இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் பண்ணலாம்’ என எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். மேலும், தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஓ.பி.எஸ் தரப்பிலோ ‘கண்டிப்பாக போட்டியிடுவோம்’ என சொல்லியிருப்பது, தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளது, சில கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
அதிமுகவை இணைப்பதற்கான பாஜகவின் முயற்சி
இந்நிலையில் மிக முக்கியமாக இங்கு கிடைக்கப்பெற்ற அரசியல் வட்டார தகவல்படி, “இந்த தேர்தலே அதிமுகவின் இரு அணிகளை இணைக்க பாஜக செய்யும் முயற்சி தான்” என சொல்லப்படுகிறது. அதாவது, இடைத்தேர்தலை நடத்த 6 மாதம் வரை அவகாசம் இருக்கும் நிலையில், அவசர கதியாக ஒரு மாதத்தில் தேர்தலை அறிவித்து நெருக்கடி கொடுப்பது இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணிகளை இணைய வைக்கத்தானாம். அதற்கு காரணம், தமிழ்நாடடில் திமுகவுக்கு மாற்றாக இருக்கும் கட்சியான அதிமுக, இப்போதைக்கு இப்படி பிரிந்து பலவீனமாக இருப்பதை பாஜக விரும்பவில்லையாம். அந்த வகையில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிகளை இணைக்க பாஜக செய்யும் முயற்சிகளில் ஒன்று தான் இந்த அவசர கதியிலான இடைத்தேர்தல் என சொல்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.
எடப்பாடியாருக்கு பாஜகவின் செக்
அதிமுகவை பொறுத்தவரையோ, ஓ.பி.எஸ். இறங்கி வந்தாலும் இ.பி.எஸ்., முரண்டு பிடித்த வண்ணமே இருக்கிறார். அந்த கோணத்தில் பார்க்கும்போது அதிமுகவை இணைக்க நினைக்கும் பாஜக, ‘முரண்டு பிடிக்கும் எடப்பாடியாருக்கு வைத்த செக் தான் இந்த இடைத்தேர்தல்’ என சொல்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். ஒருவேளை அது பலிக்காத பட்சத்தில், இரட்டை இலையை முடக்கும் செயல்பாடு தான் அடுத்த பயமுறுத்தும் விஷயமாக இருக்கலாம் என்பது ஒரு யூகம்.
ஓ.பி.எஸ்-ன் ரகசிய சந்திப்பு – இரட்டை இலை முடக்கம்
அந்த யூகத்தோடு ஒத்துப்போகிற இன்னொரு தகவல், சமீபத்தில் ஓ.பி.எஸ்., தமிழ்ச்சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்பு என்ற பெயரில் குஜராத் சென்று வந்ததற்கும், இரட்டை இலை சின்னம் முடக்கம் தொடர்பான விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக கசியும் தகவல். அதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓ.பி.எஸ்., அழுத்தம் கொடுத்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது என்னவென்பது இனிவரும் காலங்களில் தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சத்துக்கு வரும்.
தவிர்க்க முடியாத தலைவராக இ.பி.எஸ்
ஆக, மற்ற கட்சிகளை பொறுத்து பார்க்கும் பொழுது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பதவி மற்றும் அதிகாரத்தை பிடிப்பதற்கான போட்டி. அதுவே, அதிமுகவை பொறுத்தவரை இது இரு அணி இணைவிற்கான ஒரு வாய்ப்பு. இதில் கிடைக்கும் முடிவை பொறுத்தே எடப்பாடி பழனிசாமியை நோக்கியும், அதிமுக நோக்கியும் பாஜகவின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் ஒருவேளை, ‘தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பாஜகவின் அனைத்து நடவடிக்கைகளையும் தாண்டி விடாப்பிடியாக இதே நிலையில் நின்று, பாஜகவுடனான கூட்டணியையும் முறித்து தனக்கான பலத்துடன் அதிமுகவை மீட்டெடுத்தால் தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி தவிர்க்க முடியாத தலைவர் ஆவார்’ என்பதும் இங்கு அரசியல் கருத்தாளர்களின் அழுத்தமான சொற்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெல்வார் என்பது ஒருபுறம் இருக்க, இந்த இடைத்தேர்தலை சுற்றி அதிமுகவில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதே அரசியல் ஆய்வாளர்களால் ஆர்வத்தோடும் உன்னிப்போடும் உற்று கவனிக்கப்படுகிறது.