சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.-
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை பெருநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை 15.10.24 (செவ்வாய் கிழமை) மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16.10.24 (புதன்கிழமை) சென்னையில் அதிக கன மழை சுமார் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக கனமழை காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“ரொட்டி, குடிநீர் பாட்டில்களின் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். தடையற்ற குடிநீர் வழங்க போதுமான ஜெனரேட்டர்களையும் வைத்திருக்க வேண்டும். தங்கு தடையின்றி ஆவின் பால் பொருட்களின் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். முன்கூட்டியே மக்களை தங்க வைக்க வேண்டும். முக்கிய பொருட்கள், ஆவணங்களை நீர் புகார் வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
கனமழை எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம். மின் உற்பத்தி, மின் விநியோகம் சீராக இருக்க கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்களை உறுதி செய்ய வேண்டும்.
மழையளவு, அணைகளின் நீர்வரத்தைக் கண்காணித்து நீர் மேலாண்மை செய்ய வேண்டும், சாலை பணிகள் நடக்கும் இடங்களில் ஒளிரும் பட்டைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும்” என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.