கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை எதிலும் சொல்லப்படாத சில ஆன்மீக குறிப்புகள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாம் வழக்கமாக செய்யும் பூஜைகளில் ஆன்மீக ரீதியான விஷயங்களை எப்படி முறையாக கடைபிடிக்க வேண்டும்? அல்லது எப்படி செய்ய வேண்டும்? என்கிற குழப்பங்கள் ஏற்படுவது வழக்கம். நமக்குத் தெரியாமல் எவ்வளவோ விஷயங்கள் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
அவற்றை எல்லாம் முறையாக கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும்.
நாம் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது கடவுளுக்கு நைவேத்யமாக தேங்காயை வைப்பது வழக்கம். அப்படி வைக்கும் தேங்காயை நாம் சமையலுக்கும் உபயோகிக்கலாம். ஆனால் அந்த தேங்காயில் சமைத்த உணவு பொருட்களை நைவேத்யமாக மறுபடியும் தெய்வங்களுக்கு படைக்கக் கூடாது என்பது நியதி. இந்த தவறை ஒருபோதும் செய்து விடக் கூடாது.
அது போல் நைவேத்யங்களை படைக்கும் பொழுது நேரடியாக உலோகப் பாத்திரங்களில் படைக்காமல் இயற்கையாக கிடைக்கும் வாழை இலை அல்லது தெய்வீக இலைகளைக் கொண்டு நைவேத்யம் படைப்பது தான் முறையானது. நீங்கள் கோவிலுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் வீட்டில் கோலம் போட்டு விட்டு தான் செல்ல வேண்டும். அது போல் வீட்டில் விளக்கேற்றி விட்டு பின்னர் கோவிலுக்கு செல்வது தான் நல்லது.
வீட்டில் ஏற்றி வழிபடும் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதில் இருக்கும் நெய் அல்லது எண்ணையை வெறும் கைகளால் தொடக் கூடாது. விளக்கில் இருக்கும் எண்ணையை எந்த காரணம் கொண்டும் நம்முடைய தலையில் தடவிக் கொள்ள கூடாது. இது மிகப்பெரிய தெய்வ குற்றம் ஆகிவிடும்.
பொதுவாக கோவில்களில் தெய்வ தரிசனத்தை முடித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவது வழக்கம். ஆனால் மகாலட்சுமி வீற்றிருக்கும் விஷ்ணு கோவில்களில் இவ்வாறு அமரக்கூடாது. விஷ்ணு கோவிலுக்குச் சென்று விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது மகாலட்சுமி ஆனவள் நம்முடன் வருவதாக ஐதீகம் உள்ளது. எனவே எங்கும் அமராமல் நேராக வீட்டிற்கு திரும்ப வேண்டும்.
வீட்டில் குபேரர் சிலையை அனைவரும் பார்க்கும் வண்ணம் வாசலுக்கு நேரெதிராக அமைத்து வைப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பணம் சேமிக்கும் உண்டியல் கூட குபேரன் பொம்மை போன்று இருப்பது மிகவும் நல்லது.
தலைவாசலில் கதவிற்கு உட்பக்கமாக ஸ்ரீ சக்கரம், சுவஸ்திக் அல்லது ஓம், திரிசூலம் போன்ற சின்னங்களை வரைந்து வைப்பது வீட்டின் பாதுகாப்பு அரணாகவும், அதிர்ஷ்டம் பெருகவும் துணையாக இருக்கும். இந்தச் சின்னங்களை நல்ல காரியங்களுக்கு வெளியே செல்லும் பொழுது நம்முடன் எடுத்துச் செல்வதால் காரிய வெற்றி உண்டாகும்.
முக்கியமாக பூஜை அறையில் நிறைய தெய்வ படங்களை வாங்கி அடுக்கி வைக்க கூடாது. தெய்வ படங்களை நெருக்கமாகவும் கட்டாயம் வைக்க கூடாது. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் நிச்சயம் இடைவெளி இருக்க வேண்டும். தெய்வப் படங்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை அருகில் இருக்கும் கோவில்களில் கொண்டு போய் வைத்து விடுவது நல்லது. வீட்டில் கட்டாயம் வைக்கக் கூடாது.