தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா இன்று காலமானார்.அவருக்கு வயது 69.
ஆகாய கங்கை, ஊர்க்காவலன், மல்லுவேட்டி மைனர், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மனோபாலா, சந்திரமுகி, பிதாமகன், பேரழகன், ரமணா, சேது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்,வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில்,
காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எங்கள் அப்பா பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அண்ணன் மனோபாலா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.