‘அம்மா’ (AMMA) அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து இன்று (27.08.24) செவ்வாய்க்கிழமை தனது தலைவர் பொறுப்பை மோகன்லால் ராஜினாமா செய்தார்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இந்த சூழலில் தான் இன்று மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அவருடன் சேர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!!
அந்த வகையில், நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை கூறி இருந்தார்.
இதனால், சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் அவர் பதவியிலிருந்து விலகினார். முன்னதாக ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் அமைதி காத்து வந்த நிலையில், இன்று தனது தலைவர் பொறுப்பை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி மலையாள நடிகர்கள் சங்கத்தில் நிகழ்ந்த இந்த ‘கூண்டோடு’ ராஜினாமா முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.